எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

லீகோ சொல்லும் பாடம்

வருடந்தோறும், லீகோ எனப்படும் சிறிய பிளாஸ்டிக் விளையாட்டு செங்கற்கள், கிட்டத்தட்ட உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா பத்து என்ற சதவீதத்தில், சுமார் எழுநூற்றைம்பது கோடி அளவு உற்பத்தி செய்யப்படுகின்றன. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன்சன் என்ற விளையாட்டுப்பொருள் தயாரிப்பாளரின் நீடியபொறுமை மட்டுமில்லையெனில், இன்று நமக்கு இந்த லீகோ என்ற விளையாட்டுப்பொருளே கிடைத்திருக்காது. 

"நன்றாய் விளையாடு" என்ற அர்த்தம் கொண்ட இந்த லீகோவை உருவாக்க, டென்மார்க்கில் உள்ள பிலுண்ட் என்ற ஊரில், பல ஆண்டுகளாக கிறிஸ்டியன்சன் கடுமையாக    உழைத்தார். அவர் தொழிற்கூடம் இருமுறை தீக்கிரையாக்கப்பட்டது, உலகப்போரால் மூலப்பொருள்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டார். இறுதியாக 1940களின் இறுதியில்தான் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் விளையாட்டு செங்கற்களைத் தயாரிக்கும் எண்ணம் உதித்தது. 1958 ஆம் ஆண்டு கிறிஸ்டியன்சன் மரிக்கும்போது, லீகோ எனும் பெயர் மிகவும் பிரபலமாய் மாறியிருந்தது.

வாழ்விலும், தொழிலும் சவாலான நேரங்களில் விடாமுயற்சியோடு சகிப்பது கடினம். இயேசுவைப் போல மாற வேண்டுமென்ற நோக்கமுடைய நமது ஆவிக்குரிய வாழ்விற்கும் இது பொருந்தும். உபத்திரவங்கள் நம்மை வாட்டுகையில், சகிப்பதற்கு நமக்கு தேவபெலன் அவசியம். "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" (யாக்கோபு 1:12) என்று அப்போஸ்தலன் யாக்கோபு எழுதினார். சிலசமயம் நாம் எதிர்கொள்ளும் சோதனை உறவிலோ, பொருளாதாரத்திலோ அல்லது உடல்ரீதியாகவோ நமக்குப் பின்னடைவை உண்டாக்கும். சில சமயங்களில் தேவனை மகிமைப்படுத்தி வாழ வேண்டும் என்று நாம் கொண்டுள்ள  தீர்மானத்தை சோர்வடையச் செய்வதாகவும் இருக்கும்.

ஆனால் இதுபோன்ற நேரங்களில் நமக்குத் தேவையான ஞானத்தைத் தருவதாகத் தேவன் வாக்குரைத்துள்ளார் (வ.5), நமக்குத் தேவையானதை அளிப்பாரென்ற நம்பிக்கையோடு நாம் இருக்கவேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார் (வ.6). இவை எல்லாவற்றினூடே நமது வாழ்வின் மூலம் அவரை மகிமைப்படுத்தும் நோக்கில், அவருடைய உதவியைத் தேடினால், மெய்யான ஆசீர்வாதத்தைக் கண்டடைவோம் (வ.12).

அறிவிக்கப்படாத ஐசுவரியம்

செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே, ஒரு சுற்றுப்பாதையில், டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு சிறிய கோள் தெரிந்தது. அங்கு விலையேறப்பெற்ற தங்கம், இரும்பு, நிக்கல் மற்றும் பிளாட்டினம் கிடைக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பூமிவாசிகள் தற்போதைக்கு இந்த வளத்தை அனுபவிக்கவில்லை. அதில் உள்ளப் பாறையை ஆய்வுசெய்ய ஓர் ஆய்வுக்குழுவை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

நமக்கு எட்டாத விலையேறப்பெற்றவைகளை நினைக்கும் போது ஆசையைத் தூண்டுகிறதாகவும் அதே நேரத்தில் சோர்வடையச் செய்கிறதாகவும் இருக்கிறது. ஆனால் நிச்சயமாய் ஒருநாள், விஞ்ஞானிகள் அந்த கிரகத்தில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டெடுப்பர். நாம் கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கும் பொக்கிஷங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? அதை நோக்கிச் செல்கிறோமா? 

முதலாம் நூற்றாண்டின் ரோம திருச்சபைக்கு, பவுல், தேவனோடுள்ள உறவின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பொக்கிஷங்களைக் குறித்து குறிப்பிடுகிறார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” (ரோமர் 11:33). ஜேம்ஸ் டென்னி என்னும் வேத நிபுணர், இந்தப் பொக்கிஷங்களை, “உலகத்தின் பெரிய தேவையை சந்திக்கும் தேவ அன்பாகிய பொக்கிஷம்” எனக் குறிப்பிடுகிறார்.

தங்கத்தைக் காட்டிலும், வெகு தூரத்திலிருக்கும் கோள்களைக் காட்டிலும், இதுவல்லவா தேவையில் இருப்போருக்கு வேண்டும்? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு தெய்வீக ஞானம் என்னும் பொக்கிஷத்தை நாம் வேதத்தில் தோண்டியெடுக்க வேண்டும். இந்தப் பொக்கிஷங்களை தோண்டி, தேவனை இன்னும் அறிந்துகொள்வதற்கு தேவன் நமக்கு உதவிசெய்வாராக.

சூரிய ஒளி வட்டம்

அது ஒரு வெப்பமான கோடை நாள். நானும் எனது நான்கு வயது பேத்தி ரிதுவும் பந்து விளையாடுவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வராந்தாவில் கண்ணாடி கோப்பையில் தண்ணீருடன் அமர்ந்திருந்தபோது, ரிது முற்றத்தைப் பார்த்து, “சூரிய ஒளி தரையில் படுவதைப் பாருங்கள்” என்றாள். இருண்ட நிழல்களுக்கு மத்தியில் ஒளியின் வட்டத்தை உருவாக்க சூரிய ஒளி அழகாய் ஊடுருவுகின்றது. 

சூரிய ஒளி வட்டம். இருண்ட நாட்களில் நம்பிக்கையைத் தேடுவதற்கு இது ஒரு அழகான படம் அல்லவா? பெரும்பாலும் சவாலான நேரங்களின் மத்தியில், நிழல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒளியின் மீது கவனம் செலுத்துவது சிறந்தது. 

அந்த ஒளிக்கு ஒரு பெயர் உண்டு - இயேசு. இயேசு மாம்சத்தில் வந்தபோது, உலகில் உதித்த பிரகாசத்தை விவரிக்க மத்தேயு ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது” (மத்தேயு 4:16; ஏசாயா 9:2ஐயும் பார்க்கவும்). “மரண இருளில்” நாம் வாழும்போது, பாவத்தின் விளைவுகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. ஆனால் அந்த இருளை பிரகாசிபிக்கிறவர், உலகின் மகத்தான மற்றும் புகழ்பெற்ற ஒளியான இயேசு (யோவான் 1:4-5).

“சூரிய ஒளியின் வட்டங்கள் மின்னுவது போல” இயேசுவின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒளி,  நம் இருளில் ஊடுருவி, நம் நாளை ஒளிரச் செய்யவும், நம் இதயங்களை நம்பிக்கையுடன் பிரகாசிக்கவும் செய்கிறது.

பாவத்திற்கு விலகி ஓடுதல்

இந்த கோடையில் இரண்டு முறை நான் காஜர் காஸ் (கேரட் புல்) என்று சொல்லப்படும் தாவரத்தினால் ஒருவகையான பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டேன். இரண்டு முறை எங்கள் முற்றத்தில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். சிறு வெள்ளைப் பூக்களைக் கொண்ட இந்த காஜர் காஸ் செடிகள் ஓங்கி வளர்ந்திருந்ததை இரண்டு முறையும் பார்க்க நேர்ந்தது. அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அதின் அருகில் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். விரைவில், நான் தவறு செய்தேன் என்பதை உணர்ந்தேன். இந்த சிறிய பச்சை விரோதியை நான் நெருங்குவதற்கு பதிலாக, நான் எதிர் திசையில் ஓட்டமெடுத்திருக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள யோசேப்புக் கதையில், வளர்ந்து படரும் விஷ தாவரங்களைக் காட்டிலும் கொடிதான பாவத்திலிருந்து விலகியோட வேண்டியதின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். அவன் எகிப்தின் போத்திபாருடைய வீட்டில் தங்கியிருந்தபோது, போத்திபாரின் மனைவி அவனை இச்சையோடு அணுகுகிறாள். யோசேப்பு அவள் அருகாமையில் செல்ல முயலவில்லை. மாறாக, விலகியோடுகிறான்.
அவள் அவன் மீது பொய்யாகக் குற்றஞ்சாட்டி அவனை சிறையில் தள்ளினாலும், யோசேப்பு தன் வாழ்நாள் முழுவதும் சுத்தமனசாட்சியோடே இருந்தான். ஆதியாகமம் 39:21ல் நாம் பார்க்கிறபடி, “கர்த்தர் அவனோடிருந்தார்.”

தேவனிடத்திலிருந்து நம்மை விலகியோடச் செய்யும் செயல்கள் மற்றும் சூழ்நிலைகளில், பாவத்திற்கு எதிர் திசையில் நாம் ஓடுவதற்கு தேவன் நமக்கு உதவிசெய்ய முடியும். 2 தீமோத்தேயு 2:22ல் பவுல், “பொல்லாத இச்சைகளை விட்டு ஓடுங்கள்” என்று எழுதுகிறார். மேலும் 1 கொரிந்தியர் 6:18ல், “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்றும் அறிவுறுத்துகிறார்.
நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விலகியோடுவதற்கு, தேவனுடைய பெலத்தை நாம் சார்ந்துகொள்வோம்.

சூரியகாந்தியின் யுத்தம்

பூச்செடிகளைக் குறித்த என் கருத்தும், எங்கள் பக்கத்து வீட்டு பசுமாடுகளின் கருத்தும் வித்தியாசமானது. ஒவ்வொரு கோடையிலும் நான் பூச்செடிகளை நடுகையில், அதின் பூத்துக்குலுங்கும் அழகையே எதிர்பார்ப்பேன். ஆனால், அந்த மாடுகள் அதைக் குறித்து சற்றும் கவலைப்படுவதில்லை. அதில் ஒன்றும் மிச்சமில்லாமல் தின்றுவிடும். ஒவ்வொரு கோடையிலும் இந்த நாலு குளம்பு நண்பர்களுடன் போராடி, என் பூக்களைக் காப்பாற்றுவதே என் ஆண்டான்டு வழக்கமாக மாறினது. சிலவேளை நான் ஜெயிப்பேன், சிலவேளை அவை ஜெயிக்கும்.
இதேபோன்ற ஒரு யுத்தத்தைத் தான் கிறிஸ்தவர்களாய் நாம் ஒவ்வொருநாளும் நம் எதிரியான சாத்தானுடன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய மகிமைக்காய் ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைவதே நம் இலக்காய் வைத்து செயல்படுகிறோம். நம் விசுவாசத்தை அவமாக்கி, நம் வளர்ச்சியை சாத்தான் தடைபண்ண வேண்டுமென்றுள்ளான். ஆனால் நம்மை பரிபூரணமுள்ளவர்களாக்க, அனைத்து அதிகாரங்களுக்கும் மேலானவரான இயேசுவால் கூடும் (கொலோசெயர் 2:10). அதாவது, அவர் நம்மை முழுமையாக்குகிறார் என்று பொருள். கிறிஸ்து சிலுவையில் பெற்ற வெற்றி என்பது, மாடுகளிடமிருந்து தப்பித்து பூத்துக்குலுங்கும் அந்த பூக்களைப் போன்றது.
இயேசு நமக்கு விரோதமாக இருந்த கையெழுத்தைக் குலைத்து (வச.14), சிலுவையின்மேல் ஆணியடித்து, நம்மைக் கட்டியிருந்த அனைத்து அதிகாரங்களின் மீதும் ஜெயமெடுத்தார். நாம் “விசுவாசத்தில் உறுதிப்பட்டு” (வச.7), அவரோடே உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம் (வச.13). அவரால் நாம் பெலப்படுத்தப்பட்டு (வச.10), எதிரியின் தாக்குதல்களை மேற்கொண்டு, கிறிஸ்துவில் வாழ்ந்து நம் மெய்யான அழகோடு பூத்துக் குலுங்குவோம்.

மற்ற ஏழுபேர்

ஜனவரி 2020இல் லாஸ் ஏஞ்சலஸில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்பது பேர் பலியாயினர். “பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரயண்ட்டும், அவருடைய மகள் ஜியானாவும் (கிகி) மற்றும் ஏழுபேர் இந்த விபத்தில் பலியாயினர்” என்று அநேக செய்திகள் இவ்வாறே வெளிவந்தன.

பிரபலமான நபர்கள் இதுபோன்ற கொடூரமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கையில், அவர்களுக்கு தனி முக்கியத்துவம் அளிப்பது இயல்பானதும், புரிந்துகொள்ளக்கூடியதும் தான். கோபே மற்றும் அவரின் பதின்பருவ மகள் கிகி ஆகியோரின் மரணம் நம்மை துயரில் ஆழ்த்துகிறது.   அதேநேரத்தில் விபத்தில் மரித்த மற்ற ஏழுபேர்களின் மரணங்கள் (பேடன், சாரா, கிறிஸ்டினா, அலிசா, ஜாண், கெரி மற்றும் ஆரா) எந்த விதத்திலும் தாழ்ந்ததில்லை. 

ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நாம் சிலவேளைகளில் உணரவேண்டும். பிரபலமானவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் சமுதாயம் முக்கியத்துவம்  அளிக்கிறது. ஆனால், உங்கள் அண்டை வீட்டாரை காட்டிலும், வீதிகளில் விளையாடும் பிள்ளைகளைக் காட்டிலும், கடினமான சூழ்நிலையில் உள்ளவர்களை காட்டிலும் அல்லது உங்களைக் காட்டிலும் இந்த புகழும், பிரபலமும் ஒருவரையும் முக்கியமானவர்களாய் மாற்றாது. 

எழையோ பணக்காரனோ (நீதிமொழிகள் 22:2), பூமியிலுள்ள எல்லா மனிதர்களும் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27). யாரும் தேவனுடைய பார்வையில் அதிக மேன்மையானவர்கள் இல்லை (ரோமர் 2:11). அனைவருக்கும் இரட்சகர் அவசியம் (3:23). 

திருச்சபையிலோ (யாக்கோபு 2:1-4) அல்லது சமுதாயத்திலோ, நாமும் பாரபட்சமில்லாமல் செயல்படும்போது நாம் நம்முடைய தேவனை மகிமைப்படுத்துகிறோம்.    

கழுவப்பட்டது

ஹரிஷ் தன் நண்பரான டேவ் என்பவரிடம் அவர் தேவனை விட்டு பிரிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்பதைக் குறித்து விவரித்தான். அதன் பின்பு ஒருநாள் மீண்டும் டேவை சந்தித்து, தேவனுடைய அன்பு நம்மை இரட்சிக்கும் வழியைக் குறித்து விளக்கினான். டேவ் இயேசுவின் விசுவாசி ஆனார். அவர் கண்ணீருடன் தன் பாவத்திற்கு மனவருத்தப்பட்டு தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தார். பிறகு ஹரிஷ் டேவிடம் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “கழுவப்பட்டேன்” என்று சுருக்கமாகக் கூறினாராம். 

ஆச்சரியமான பதில்! நமக்காகச் சிலுவையில் இயேசு பலியானதை விசுவாசிப்பது நம் இரட்சிப்பின் சாரமாகும். 1 கொரிந்தியர் 6ல் பவுல் தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமை தான் நம்மைத் தேவனிடமிருந்து பிரித்தது என்கிறார். “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (வச. 11). “கழுவப்பட்டீர்கள்,” “பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,” “நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” ஆகிய வார்த்தைகள் விசுவாசிகள் மன்னிக்கப்பட்டு தேவனிடத்தில் ஒப்புரவாக்கப்பட்டதை வலியுறுத்துகிறது. 

இரட்சிப்பு என்னும் அற்புதமான காரியத்தைக் குறித்து தீத்து 3:4-5 நமக்கு அறிவிக்கிறது. “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” நம் பாவம் தேவனிடமிருந்து நம்மை பிரித்தது; ஆனால் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசத்தால் நம் பாவத்தின் தண்டனை கழுவப்பட்டது. நாம் புது சிருஷ்டியாக்கப்பட்டு (2 கொரிந்தியர் 5:17), பிதாவிடத்தில் சேரும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம் (எபேசியர் 2:18). மேலும் நாம் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம் (1 யோவான் 1:7). நாம் கழுவப்படுவதற்கு தேவையானதை அவரால் மட்டுமே கொடுக்கமுடியும்.

தேவனின் ஆச்சரியமான படைப்பு

நானும் எனது மனைவியும் ஒரு சாதாரண இயற்கை நடைபயணம் மேற்கொள்ள துவங்கினோம். எங்கள் ஊரில் இருந்த நதியோரமாய் நாங்கள் போன அந்த பயணம் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாய் மாறியது. சிதறிய தண்ணீரில் எங்களுக்கு பழக்கப்பட்ட சில நண்பர்களான 5 அல்லது 6 ஆமைகள் சூரிய ஒளியில் மின்னுவதைப் பார்த்தோம். பல மாதங்களாய் நாங்கள் பார்க்கத் தவறின இந்த ஆச்சரியமான உயிரினங்களைப் பார்த்து நாங்கள் புன்னகைத்தோம். அவைகள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தேவனுடைய இந்த அற்புதமான படைப்பில் நாங்கள் ஒரு கணம் மகிழ்ச்சியை கொண்டாடினோம். 

தேவன் யோபுவையும் ஒரு இயற்கை நடை பயணம் கூட்டிச்செல்லுகிறார் (யோபு 38ஐ காண்க). இக்கட்டில் இருக்கும் இந்த மனிதனுக்கு அவனுடைய நிலைமையைக் குறித்து, சிருஷ்டிகரிடத்திலிருந்து பதில் தேவைப்படுகிறது (வச. 1). தேவனோடு நேரிட்ட இந்த நடைபயணம் இந்த மனிதனுக்குத் தேவையான உற்சாகத்தை அளித்தது. 

இந்த உலகத்தின் நேர்த்தியான வடிவமைப்பை யோபுவுக்கு விவரிக்கும்போது யோபுவின் ஆச்சரியத்தை சற்று கற்பனை செய்யுங்கள். இந்த உலகத்தைப்பற்றி அதை உண்டாக்கியவரிடமிருந்து நேரடியாய் யோபு கேட்கிறான்: “அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே” (வச. 6-7). சமுத்திரத்தின் வரையறையைக் குறித்த பூகோளவியல் பாடத்தை தேவன் யோபுவுக்கு கற்றுக்கொடுக்கிறார் (வச. 11). 

மேலும் தேவன் யோபுவுக்கு, ஒளி, பனி, மழை என்று தன்னுடைய சிருஷ்டிப்புகளை ஏன் சிருஷ்டித்தார் என்று அறிவிக்கிறார் (வச. 19-28). ஆகாயத்தில் மிதப்பவரிடமிருந்து விண்மீண்களைக் குறித்து யோபு கேட்டறிகிறான் (வச. 31-32).

கடைசியாக, “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்” (42:2) என்று யோபு ஒப்புக்கொள்கிறான். இந்த இயற்கையை நாம் அனுபவிக்கும்போது, நம்முடைய ஞானமுள்ள அற்புதமான சிருஷ்டிகரை நினைத்து பூரிக்கலாம். 

தற்போதைய யுத்தங்கள்!

இன்று மின்னணு உபயோகப்பொருட்களை மின்சாரத்துடன் இணைக்கும்போது நாம் பயனடைகிறோம். இது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏறெடுக்கப்பட்ட கசப்பான முயற்சியின் விளைவு. தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் நிகோலா டெஸ்லா ஆகிய இருவரும் ஆண்டுகளாய் போராடி, மின்கலத்திலிருந்து புறப்பட்டு விளக்கை ஒளிரச்செய்யும் நேரடி மின்னோட்டம் மற்றும் மின்கம்பிகளிலிருந்து நாம் பெறும் மாறுதிசை மின்னோட்டம் -நல்ல வகையான மின்சாரத்தைக் கண்டுபிடித்தனர்: 

டெஸ்லாவின் இந்த மாறுதிசை மின்னோட்ட கண்டுபிடிப்பு, வீடுகள், அலுவலகங்கள் என்று உலகத்திற்கே பயன்படும் வகையில் அமைந்தது. இந்த மாறுதிசை மின்னோட்டமே அதிக தூரத்தை எளிதில் கடந்து மின்சாரத்தை பாய்ச்சும் ஞானமான ஒரு கண்டுபிடிப்பு என்று நிரூபிக்கப்பட்டது. 

சிலவேளைகளில் கிறிஸ்தவர்களாகிய நமக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நமக்கு ஞானம் தேவைப்படுகிறது (ரோமர் 14:1-2). அதற்கு நாம் தேவனுடைய உதவியை நாடும்படிக்கு பவுல் அறிவுறுத்துகிறார். “எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்” (பிலிப்பியர் 3:15) என்று ஆலோசனை கூறுகிறார். அதற்கு பின்பு, பவுலை வேதனைப்படுத்திய பிரிவினையை உண்டுபண்ணிய இருதரப்பினரைக் குறித்து, “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்” (4:2) என்று தொடர்ந்து கூறுகிறார். 

நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் முரண்பாடான கருத்துக்கள் தோன்றும்போது, சத்தியம் போதிக்கும் தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும், மூப்பர்களின் ஆலோசனையையும், ஜெபத்தின் வல்லமையையும் சார்ந்துகொள்ள வேண்டும். அவருக்குள் “ஒரே சிந்தையாயிருக்கக்கடவோம்” (வச. 2).